Friday, April 4, 2008

நான் நேசித்த கவிதை...

வாழ்கையின் யதார்த்ததை
என்னை யோசிக்க வைத்த
என் ரசனைக்கு உரிய
ஓர் படைப்பு
உங்கள் முன்னால்...

நிம்மதியின் சந்நிதி
--------------------------

சோகத்தின் சொந்தக்காரனே
கவலைகளின் கைதியே
ஏமாற்றங்களின் விலாசமே
இடிந்துகிடக்கும் இதயமே

முனுமுனுப்புக்களில்
மூச்சை கரைத்தது போதும்
என் சிந்தனை தேரில் வந்தமர்

ஓர் ஞான யாத்திரை நடத்தி பார்போம் !

உன் உயிர்
உன்னை கேட்டு உண்டானதில்லை
உன் உடல்
உன் உடன்பாட்டோடு உருவானதில்லை

உன்
அழகோ அழகின்மையோ
ஏழ்மையோ செல்வமோ

எதுவாயினும்
அவை பிறப்பால் திணிக்கப்பட்ட
இயற்கை பிடிவாதங்கள் !

வாழ்க்கை என்பது
செலவளித்தே தீர்க்க வேண்டிய செல்வம்
நொடி நொடியாக
பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி நகரும் பயணம்

இதில்
எல்லாமுள்ளவனும்
ஏதுமில்லாதவனும்
என்றுமே இருந்ததில்லை !

சதுரங்கத்தின் கருப்பு வெள்ளையாய்
இன்ப துன்பம் விரவி கிடக்கும்
வாழ்க்கை களத்தில்,

நீ
ஆட்டக்காய் என்கிறது இறையுணர்வு
ஆட்டக்காரன் என்கிறது பகுத்தறிவு

இதுவோ அதுவோ

இங்கே
கேட்டதெல்லாம் கிடைப்பதில்லை
கிடைத்ததெல்லாம் கேட்டதில்லை !!!

மன்னிலுறை தாவர சங்கமத்தில்
மகத்துவம் அதிகம் பெற்ற மனிதனே

எதிர்பார்ப்பு காற்றில்
இலவமாய் பறந்து
ஏமாந்து கணங்களில்
இரும்பாகி போக
எது காரணம்?

மனம்
மனம்
மனம் !!!

இங்கே
மனமிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
கனவிருக்கும்
கனவிருக்கும் வரை
துயரிருக்கும்.

இப்பொல்லா மனதை
ஒதுக்கி வைத்து ஓட முடியாது

உன் இயக்கம்
முற்று புள்ளியை எட்டி விடுமுன்
உன் மயக்கம்
மறைந்து போக வேண்டாமா?

சஞ்சலிக்கும் மன பேயை
தேவனாக்கும் சாதனையே
சத்திய தரிசனம்
புறத்தே பார்த்து பார்த்து புலம்புகின்றவனே

நீ
அகத்தை பார்க்க ஆரம்பித்துவிடு !

சட்டையில்லா உடம்பின் மேல்
சாட்டையால் அடித்து கொண்டு
பிச்சை கேட்பவர் போல்

ஆசை என்னும் சாட்டையால்
ஆன்மாவை வதைத்து கொள்ளும்
அவலத்தை கொல்.

உள்ளத்தை களைத்த ஒருத்தி
உடன்பட்டு விட்டால்
இன்னொன்று ஈர்க்காமல் விட்டுவிடுமா?
கூடை கூடையாய்
ஆடைகள் குவிந்தாலும்
போதும் என்ற நிறைவு பூத்துவிடுமா?
வகை வகையாய்
வடித்து தின்றாலும்
சுவையுணர்ச்சி சுருங்கி போகுமா?

வீடு கிடைத்தால் ஊரின் மேலும்
ஊர் அமைந்தால் நகரின் மேலும்
நகர் எய்தினால் நாட்டின் மேலும்
பெருகி கொண்டே போகும்

ஆசைக்கு அளவென்பதில்லை!

தாய் பூச்சியை கொல்லும் வரை
கரையான் புற்று மறையாது
ஆசை பூச்சியை கொல்லும் வரை
சோக சுமைகள் குறையாது!


உடம்பை களைப்பாற்ற
உறங்குகின்ற மனிதனே
மனதை இளைப்பாற்ற
மறந்து விட்டதேன்?

பசுமையும் வரட்சியும்
மழையை சார்ந்தது
இன்பமும் துன்பமும்
மனதை சார்ந்தது!

அலைகின்ற மனது
தீப்புன்னாய் எரியும்
அசையாத மனமோ
இன்ப தேன் சொரியும்

நீ
நியாயமான இலக்குகளை
நியாயமாக தேடு
பேராசை வித்துக்களை
விவேகத்தால் சாடு

ஏனெனில்
ஆர்ப்பாட்ட அனுபவங்களை விட
அமைதி அளிக்கும் ஆனந்தம்
அதிகமானது!

என் பாட்டோடு பயணித்த
தோழனே,

பொறுப்பின்றி ஒடுங்குவது
புத்தியின் சுருக்கம்
வெறி கொண்டு திரிவது
துன்பத்தை பெருக்கும்

இருப்பதில் மகிழ்வது தான்
ஞானத்தின் துவக்கம்!

சுகங்களை அடைவது நிம்மதியா
நிம்மதியை அடைவது சுகமா

நீயே தேர்ந்தேடுத்துக்கொள் !!!

Thursday, February 14, 2008

காதல் எனது பார்வையில்....

காதலை எனது பார்வையில் கூற
நான் ஒன்றும் ஞானி அல்லவே

பின்பு ஏன் காதலை பற்றி
எனது பார்வையில் கூற வந்தேன்???


எனது இந்த சொற்கள் காதலை
விமர்சனம் செய்ய அல்ல!

காதல் என்ற ஒன்று என்னுள் எவ்வெவ்வாறு
உருமாறியதென்பதை கூறவே வந்தேன்!


என் பள்ளி வயதில்...

காதல் என்றால் வெறுப்பு
காதல் என்றால் பிரிவு
காதல் என்றால் பிரச்சனை

விவரமரியா அந்த பருவத்தில்
காதலை அனைவரும் காதலிக்கும் அப்பருவதில்

காதல் எனக்கு வெறுப்பாய் போனது !!!


கல்லூரி வயதில்...

காதல் என்றால் காமம்
காதல் என்றால் பைத்தியகாரத்தனம்
காதல் என்றால் சலிப்பு

உலகம் அறிய ஆசைப்படும் அந்த பருவத்தில்
அனைவரும் காதலின் காலடியை தேடும் அப்பருவத்தில்

காதல் என்பது எனக்கு சுமையாய் ஆனது !!!


அடுத்த நான்கு வருடத்தில்...

காதல் என்றால் வீண் வேலை
காதல் என்றால் பொழுது போக்கு
காதல் என்றால் விதண்டாவாதம்

உலகம் அறிந்த அந்த வயதில்

அனைவரும் காதலின் சுகம் காணும் அவ்வயதில்
காதல் என்பது எனக்கு வேடிக்கையாய் போனது !!!

இன்றோ...

காதலின் சுகம் புரிய முயற்சி செய்கிறேன்...
காதலின் கணம் கண்டு கலவரமடைகிறேன்...
காதலின் உண்மை அறிய அவா கொள்கிறேன்...

அன்று வேடிக்கை போன காதல்
அன்று சலிப்பை தோன்றிய காதல்
அன்று வெறுப்பாய் தோன்றிய காதல்

இன்று...???

Tuesday, February 12, 2008

என்னை நேசித்த முதல் நொடி...

எவருக்காவது தம்மை நேசித்த
முதல் நொடி நினைவிருக்கிறதா?

நான் அறிவேன்
என்னை நான் நேசிக்க தொடங்கிய
அந்த முதல் நொடி...

ஆம்
வானம் என்ற தலைப்பில் நான்
எழுத தொடங்கிய அந்த முதல் நொடி...

மன்னிக்கவும் நான் கிறுக்க தொடங்கிய
அந்த முதல் நொடி!!!

அந்த நொடி...

என்னை நானே விமர்சனம் செய்ய தொடங்கினேன்

எனக்கு நானே எதிரியானேன்!
எனக்கு நானே தோழியானேன்!

என்னுள் நானே உணர்வாய்
என்னுள் நானே உயிராய்
என்னுள் நானே காதலாய்
என்னுள் நானே அந்நியமாய்

பிரவேசித்த அந்த முதல் நொடி...

என் பசுமையான பொக்கிஷங்களில்
முதல் பொக்கிஷமாய் அந்த நொடி என்னுள் இருக்கும்

நான் இறந்ததின் அடையாளமாய்
அந்த நொடி என்னுள் முதலில் இறந்து போகும்!

அந்த நொடியில் தான்

என் சிறகுகளை நானே
விரிக்க பழகி கொண்டேன்!

என் செதில்களை நானே
செதுக்க கற்று கொண்டேன்!

என்னுள் நான் பிரசவித்த
என்னுள் நான் பிரசவிக்கப்பட்ட

அந்த முதல் நொடி!!!

என்னுள் நான் நிகழ்த்திய மாற்றங்கள்
என்னுள் நான் உணர்ந்த மாற்றங்கள்

என்னுள் நான் கண்ட முதல் வெற்றி
எனக்கு நான் தந்த முதல் தோல்வி

என்னுள் நான் கண்ட முதல் சந்தோஷம்
எனக்குள் நான் பகிர்ந்த முதல் சோகம்...


பல பிரதிகள் தாண்டி
இன்னும் திருத்தப்படாமல்
இன்றும் நேசிக்கப்படும்...

என் மீது நான் கொண்ட காதலின்
என் மீது நான் கொண்ட நேசத்தின்
முதல் வெளிப்பாடு!!!

இன்றும் என் ஞாபக பெட்டகத்தின்
பொக்கிஷமாய்

என் ரகசிய பக்கங்களின்
முதல் ரகசியமாய்....

எனது தேடல்...

நிழலில் நிஜத்தையும்
நிஜத்தில் நிழலையும்

சரியில் தவறையும்
தவறில் சரியையும்

தேடும் பேதை பெண் நான்.

சிலருக்கு எனது தேடல்
வேடிக்கையாயிருக்கும்

பலருக்கு எனது தேடல்
விதண்டாவாதமாய் தோன்றும்

எது எப்படியோ...
என்னுள் எனது தேடல்
என்றுமே சலித்துப்போனதில்லை!!!


உண்மையில் சிறு பொய்யுண்டு
பொய்யிலும் சிறு உண்மையுண்டு

வாழ்க்கை என்ற நிஜத்தில்
என்னுள் நானே நிழலானேன்

எப்போது நிஜமாகப்போகிறேன்?

நான் நிஜமானால்
என் வாழ்க்கை நிழலாகுமா?

என் வாழ்க்கை நிழலானால்
நான் நானே தானா?.

...???

என்னுள் நானே...

என்னுள் நானே பிரவேசிக்கிறேன்
என் கற்பனை உலகில் பிரயாணம் செய்கின்றேன்

பல நாளாய் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த
பல நாளாய் என்னுள் தொலைந்து போன
நான்
இன்று நானாய் பிறக்க தயாராகிறேன்.

என்னுள் எது மறைந்தது?
என்னை எது மறைத்தது?

விடை...
புரிந்தும் புரியாமல்
வாழ்வின் மாற்றம்...
அறிந்தும் அறியாமல்

என்னை நான் ஏமாற்றினேனா?
விதி ஏமாற்றியதா?

எது எப்படியோ...
இந்த மாற்றம்
இந்த தேடல்
இந்த வேகம்

என்னுள் நிகழ்ந்த
ஒரு நாள் மாற்றமா?
பல நாள் போராட்டமா?

எதுவாயினும்
இதோ என்னுள் நான் என்னை உணர

இன்னொரு உண்மை ...

Monday, February 11, 2008

முதல் கிறுக்கல்...

என்னுடைய முதல் கிறுக்கல் இது.

என்னுடைய முதல் தேடலாய்
என்னுடைய முதல் பதிவேடாய்
என்னைப் பற்றிய சில வரிகள்...

நான் என்ற வார்த்தை
இப் பதிவேட்டில் அதிகம் பயன்பட்டிருக்கும்.

ஆம்
என்னை நான் தொலைத்து பல வருடங்களுக்குப் பிறகு

இன்று என்னுள் பிரவேசிக்கிறேன்
இன்று என்னுள் பிரயாணம் செய்கின்றேன் !

கவிதையை காதலாய் கொண்டவள் நான்
கற்பனையின் மேல் அளவில்லா மோகம் கொண்டவள் நான்
சுகமோ, சோகமோ
வெற்றியோ, தோல்வியோ
இன்பமோ, துன்பமோ
நட்போ, பகையோ

தமிழின் சுகத்தில் இளைப்பாருவேன்.

நான்
தமிழ் கற்றவள் அல்ல
தமிழ் பற்று உள்ளவள்.

பகுத்தறிவு சிந்தனையில் கூறுவதானால்...
தமிழ் மட்டுமே அறிந்தவள்!


தனிமையில் தமிழை துணையாக்கி
துன்பங்களை தூக்கி எரிந்தவள்


இப்படியாக...

நான் என்பவள் என்னை விட்டு
வெகு தூரம் சென்று விட்டேன்

தொலைந்து போன கால்ங்களுக்காக
என்னை நான் நொந்து கொள்ளவோ

இன்று என்னுள் நான் இல்லை !!!

தொலைந்த நான் தொலைந்தே போகாமல்
இன்று என்னை தேடி புறப்பட்ட காரணம்?
- அடுத்த பதிவேட்டில்...

தேடுகிறேன் என்னை...

என்னை என்னுள்ளே தேடுகிறேன்!!!

என்னுடைய தோழியாய்
என்னுடைய விமர்சகியாய்
என்னுடைய ரசிகையாய்
என்னுடைய கவியாய்
என்னுடைய குருவாய்

இருந்த நான் எங்கே?

நான் என்பது யார்?

எனக்குள் ஓர் உயிராய் இருந்த நான்
எனக்குள் ஓர் கவியாய் இருந்த நான்
எனக்குள் ஓர் கற்பனையாய் இருந்த நான்
எனக்குள் ஓர் நிகல்காலமாய் இருந்த நான்...

எனக்குள் ஏன் இறந்தகாலமாகிறேன்?

இன்று

எனக்கே ஏன் அந்நியமாகிறேன்???